Thursday, March 20, 2014

இந்திய வரலாறும், பழங்கால இந்திய வரைபடங்களும்-11

7.நாரத புராணம்(சுமார் 25000 ஸ்லோகங்கள்)

                  ஹிந்து வாழ்க்கை முறையில் புராணங்களுக்கு ஒரு தனி இடம் உண்டு என்றால் அந்த புராணங்களில் நாரத மஹரிஷிக்குத் தனி இடம் ஒன்று உண்டு. நாரத புராணம்  என்பது பதினெண் புராணங்களில் நாதரைப் பற்றி கூறுவதாகும். இப்புராணம் இருபத்தி ஐந்தாயிரம் (25,000) ஸ்லோகங்களை கொண்டது.இது ஒரு சாத்துவிக புராணம் வகையை சேர்ந்தது.
                  நாரத முனிவர் சனத்குமாரர்களுக்கு கூறிய நாரத புராணத்தினை மீண்டும் சூதர் என்பவருக்கும், முனிவர்களுக்கும் கூறினார். இதில் நாரத முனிவரின் பிறப்பு, அவருக்கு கிடைத்த தட்சனின் சாபம், பிரம்மனின் சாபம், மனிதனாக நாதரர் பிறந்தமை, சனி பகவான் பார்வை நாதரர் மேல் பட்டது, இராமயணம், நாரதர் தமயந்தி திருமணம் போன்றவைகள் அடங்கியுள்ளன
                   பரப்பிரம்மமாகிய பகவான் அயன், அரி, அரன் என்ற மூன்று வடிவில் முறையே ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய காரியங்களைச் செய்கிறார். பிரம்மன் என்பது பேரண்டமே என்பர். இறைவனின் பெண் வடிவம் சக்தி. அது வித்யா சக்தி, அவித்யா சக்தி என இருவகைபடும். இந்த சக்தியே அரியின் லக்ஷ்மியும், பிரம்மனின் சரஸ்வதியும், ஈசனின் பார்வதியும் ஆவர். உலகம் நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்ற ஐம்பூதங்களால் ஆனது. இந்தப் பேரண்டம் ஈரேழு பதினான்கு உலகங்களைக் கொண்டது. இந்தப் பூமி ஏழு த்வீபங்களாக உள்ளது. அவை ஜம்புத்வீபம், ப்ளக்ஷத்வீபம், சல்மல த்வீபம், குசத்வீபம், கிரௌஞ்ச த்வீபம், சாகத்வீபம் மற்றும் புஷ்கரத்வீபம் இதில் நாமிருப்பது ஜம்புத்வீபம்.

           இந்த பூமியில் ஏழு சமுத்திரங்கள் உள்ளன. அவை - இலவணம், இக்ஷு, சுள், சர்பத், ததி, நெய், ஜல சமுத்திரங்கள் ஆகும். மேற்கூறிய ஜம்புத்வீபத்தில் பரத கண்டம் உள்ளது. இதுவே நாம் கூறும் பரதகண்டம் என்பர். இதைச் சுற்றிலும் இலவண சமுத்திரம் () உப்பு நீர்க்கடல் உள்ளது. வடக்கில் இமயமலைத் தொடர் உள்ளது. இங்கு கர்மங்கள் செய்யப்படுவதால் இது கர்மகண்டம் எனப்படும். ஒருவர் செய்யும் கர்மா () காரியம் பலன்களை அளிப்பதால் இது போகபூமி என்றும் அழைக்கப்படும். பலனை எதிர்பாராமல் செய்யப்படும் காரியம் () கர்மத்தை நிஷ்காமகாரியம் என்பர். இதைத்தான் மனிதன் செய்கிறான் என இறைவன் முடிக்கிறான் என்பர்.

8.பாகவத புராணம்(சுமார் 18000 ஸ்லோகங்கள்):

                     வைணவர் போற்றும் திருமாலின் அவதாரம் பற்றிக் கூறுவது பாகவத புராணம். இதனை வடமொழி நூல்கள் ஏழு வகையான கோணத்தில் செய்துள்ளன. அவற்றுள் இரண்டு வகையான நூல்-பாங்கினை மட்டுமே தமிழ் பின்பற்றியுள்ளது.

வடமொழியிலுள்ள பாகவத புராண நூல்வகை 7
i)இதிகாசம்
ii)புராணம்
iii)சங்கிதை
iv)உப-சங்கிதை
v)விஷ்ணு-ரகசியம்
vi)விஷ்ணு-யாமளம்
vii)கௌதம-சங்கிதை
               இவற்றுள் இதிகாசம், புராணம் என்னும் இரண்டு வகையான நூல்கள் மட்டுமே தமிழில் செய்யப்பட்டுள்ளன.
               ஸ்ரீ சுக முனிவரால் பரீக்ஷித்து மகாராஜனுக்குச் சொல்லப்பட்ட பகவானுடைய சரித்திரம் ஸ்ரீமத் பாகவத புராணம். இது 18,000 ஸ்லோகங்கள் கொண்டது. மக்களின் மனத்திலே பக்தியை வளர்த்து, மன அமைதியையும், சித்த சுத்தியையும் தரவல்லது. பகவானுடைய சொரூபமே பாகவதம். அதைக் கேட்பதினாலும், படிப்பதினாலும் மோக்ஷ சுகத்தை அடையலாம். ஸ்ரீமத் பாகவதத்தை ஸப்தாகமாக ஏழு நாட்களில் சிரத்தையுடன் முறைப்படி கேட்டால் சகல மங்களங்களும் சித்திக்கும்.

        ஒரு சமயம் நான்கு மகரிஷிகள் சத்சங்கம் செய்ய ஒன்று கூடினர். அப்போது தற்செயலாக அங்கு நாரத முனிவர் வந்தார். அவர் உற்சாகமின்றி இருப்பதற்கான காரணத்தை அந்த முனிவர்கள் கேட்டனர். நாரதர் சொன்னார், பூலோகத்தில் எங்கு சென்றாலும் கலிமகா புருஷனுடைய ஆதிக்கமே பரவியிருப்பதைக் கண்டேன். கடைசியாக யமுனை ஆற்றங்கரையில் ஓர் இளமங்கை இரண்டு வயோதிகர்களுடன் சோர்வாக அமர்ந்திருந்தாள். அவள் பக்தி தேவி என்றும், அந்த இரண்டு கிழவர்களும் ஞானம், வைராக்கியம் என்ற பெயரை உடையவர்கள் என்றும் அருகிலிருந்த மூன்று பெண்கள் கங்கை, யமுனை முதலிய நதிகளின் தேவதைகள் என்றும் அறிந்தேன்.

        அவள் மேலும் அந்தப் புண்ணிய பூமியான பிருந்தாவனத்தை அடைந்த உடனே புத்துயிர் பெற்று, யுவதியாக மாறியதாகவும், ஆனால் அவளுடைய புத்திரர்களான ஞானமும், வைராக்கியமும் பலஹீனர்களாகவே உள்ளனர் என்றும், அதன் காரணம் அறியாமல் அவள் தவிப்பதாகவும் கூறினாள். அப்போது நான் (நாரதர்) அவளிடம் ஸ்ரீ கிருஷ்ண சரணார விந்தங்களைத் தியானம் செய்தால் துக்கம் நீங்கி  க்ஷமத்தை அடைவாய் என்று கூறினார். இந்தக் கலியுகத்தில் பக்தியே மோக்ஷசாதனம் என்று அறிவுரை கூறினேன். அடுத்து பக்தி தேவியின் வேண்டுகோளின்படி, ஞானம், வைராக்கியம் இருவரையும் தட்டி எழுப்பி அவர்களுடைய செவிகளில் கீதா வாக்கியங்களையும், உபநிஷத் மந்திரங்களையும் உபதேசித்தேன்.

                   அப்போது ஓர் அசரீரி என்னிடம் ஒரு சத்கர்மா எப்படி புரிய வேண்டும் என்பதைச் சில சாதுக்கள் கூறுவர் என்று சொல்லியது. நான் பதரீவனத்துக்குச் சென்று தவம் ஆற்றி வருகையில் தாங்கள் என்னைக் கண்டீர்கள் அவர்கள் நாரதரிடம் யோகம், தவம், யக்ஞம் ஆகியவற்றை விடச் சிறந்தது ஞான யக்ஞம். இதுவே சத்கர்மம் ஆகும். பாகவத ஞான யக்ஞ விசேஷத்தால் ஒவ்வொரு வீட்டிலும் பக்தியானவள், ஞான வைராக்கியங்களுடன் பிரேமரசத்தை நிரப்பிக் கொண்டு விளையாடிக் கொண்டு இருப்பாள் என்று கூறினர். அப்போது நாரதர் பக்தி, ஞானம், வைராக்கியம் ஆகியோர்க்கு நன்மை செய்ய ஞான யக்ஞம் செய்கிறேன். அதற்குத் தகுதியான இடம் கங்கா நதிக்கரையில் உள்ள ஆனந்த வனம் என்று அறிந்து, அங்கு சேர்ந்து ஞான யக்ஞத்தைச் செய்தார். எல்லோரும் அங்கு வந்து சேர்ந்தனர்.

                         அப்போது சனத்குமாரர்கள் நாரதரைப் பார்த்து பாகவதத்தின் பெருமையை எடுத்துக் கூறினர். பாகவதச் சிரவணத்தாலே ஸ்ரீவிஷ்ணு நம் உள்ளத்தில் ஆவிர் பாகம் ஆகிறார். புண்ணிய கிரந்தமான பாகவதம் பன்னிரண்டு ஸ்கந்தங்களும், பதினென்ணாயிரம் சுலோகங்களும் கொண்ட உன்னத புராணம். துளசி, துவாதசி, திதி, காமதேனு ஆகியவற்றிற்கும், ஸ்ரீமகா விஷ்ணுவுக்கும், பாகவத புராணத்திற்கும், வாசுதேவரின் மந்திரத்துக்கும் எவ்வித பேதமும் கிடையாது. இதை எவனொருவன் ஆயுளின் கடைசி தறுவாயில் கேட்கின்றானோ, அவனுக்கு கோவிந்தன் பிரீதியோடு வைகுண்ட வாசத்தை அளிக்கின்றான். பாபாத்மாக்களும் இந்தக் கலியுகத்தில் ஸப்தாஹ யக்ஞத்தினாலேயே பரிசுத்தம் அடைந்து விடுகின்றனர். எல்லோரும் ஸ்ரீ ஹரியை ஸ்தோத்திரம் செய்தனர். அவ்வமயம் பக்திதேவி, இளமையும், புஷ்டியும் நிறைந்த தன் குமாரர்களுடன் அங்கு தோன்றி ஹரிநாம சங்கீர்த்தனம் செய்ய ஆரம்பித்தாள்.
   
9.அக்னி புராணம்(சுமார் 15000 ஸ்லோகங்கள்)

                  அக்னி புராணம்  என்பது பதினெண் புராணங்களில் ஒன்று. இப்புராணம் பதினைந்தாயிரம் (15,000) புராணங்களை உள்ளடக்கியது.அக்னி தேவனால் சொல்லப்பட்ட புராணம் என்பதால் அக்னி புராணம் என்று அழைக்கப்படுகிறது. இப்புராணம் வியாசரால் தொகுக்கப்பட்டது. இதில் 8000 கிரந்தங்கள் உள்ளன. இப் புராணத்தில் சிவ தீட்சை, விஷ்ணு தீட்சை, பிரபஞ்ச விளக்கம், மருந்தியல், சோதிடம் போன்றவை சொல்லப்பட்டு உள்ளன. திருமாலின் தசாவதாரங்கள், புத்தர், பிரத்யும்னன் அநிருத்தன், பிரம்மன், பரந்தாமன், ஹயக்ரீவர், தத்தாத்ரேயர், விஷ்வக்சேனர், சண்டிகை, துர்க்கை, சரசுவதி, கங்கை, யமுனை, பிராம்மி, சங்கரி, கவுமாரி, வராகி, இந்திராணி, விநாயகர், முருகன் என பல தெய்வங்களின் திருமேனிகளை அமைக்கும் விதம் பற்றி இந்நூலில் குறிப்புள்ளது. தீர்த்த குளங்களில் நீராடுதல், தெய்வ ஆராதனை வழிமுறைகள் பற்றி குறிப்படப்பட்டுள்ளது.

                18 புராணங்களில் ஒன்றான அக்னி புராணம் 15,000 ஸ்லோகங்கள் கொண்டது. நைமிசாரண்யத்தில் சவுனகாதி முனிவர்கள் பகவான் ஸ்ரீஹரியைக் குறித்து ஓர் அற்புத யாகத்தைத் தொடங்கினர். அதைக் காண வந்த சூதமுனிவரைப் பார்த்து முனிவர்கள் பிரமம் எனப்படும் பரம்பொருளின் சொரூபத்தை விவரித்துக் கூறுமாறு வேண்ட, அவரும் விளக்கிக் கூற ஆரம்பித்தார். மகாவிஷ்ணுவே பிரமம், பரம்பொருள் ஆவார். இந்த அண்ட சராசரங்களையும் தோற்றுவித்தவர் அவரே. தன்னையே ஒருவன் பிரமமாக உணரும் போது பிரம்ம சொரூபத்தை அடைகிறான். இந்த ஞானம் பெற இரண்டு வழிகள் உள்ளன
1) யாகம் முதலான கர்மாக்களைக் கடைபிடிப்பது
2) கேள்வி ஞானம். அதாவது, பரம்பொருளைப் பற்றிச் சாஸ்திரங்கள் மூலம் அறிந்து, பகவானின் அவதார ரகசியங்களைக் கேட்டும் அறிதல் என்றார். அக்னி தேவனால் சொல்லப்பட்ட புராணம் அக்கினி புராணம் முதலில் பரந்தாமன் ஹரி சாதுக்களை ரக்ஷிக்கவும், துஷ்டர்களை அழிக்கவும் எடுத்த பத்து அவதாரங்களைப் பற்றிக் கூறலானார். அவை மச்ச, கூர்ம, வராஹ, நரசிம்ம, வாமன, பரசுராம, ஸ்ரீராம, கிருஷ்ண, புத்த, கல்கி அவதாரங்கள். முதல் ஐந்து பற்றி பல புராணங்களில் (குறிப்பாக விஷ்ணு, பாகவதம், மச்ச, கூர்ம, வராக, வாமன புராணங்களில் தனித்தனியே விளக்கப்பட்டுள்ளன. நரசிம்மாவதாரம் பிரகலாதன் வரலாற்றில் கூறப்பட்டுள்ளது. ராமாவதாரம் இராமாயணத்திலும், கிருஷ்ணாவதாரம் பாகவதத்திலும் விரிவாக கூறப்பட்டுள்ளன. கல்கி புராணம் தனியாக விவரிக்கப்படுகிறது. பரசுராம அவதாரமும் வேறொரு புராணத்தில் கூறப்பட்டுள்ளது. புத்தர் அவதாரம் கவுதமபுத்தர் என்ற பவுத்த மத நிறுவனருடையதே.


10.கந்த புராணம்( சுமார் 81000 ஸ்லோகங்கள்)


                 கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் கச்சியப்ப சிவாசாரியார் என்பவரால் எழுதப்பட்ட தமிழ்க் காவியம் கந்த புராணம் ஆகும். ஸ்கந்த புராணத்தின் சங்கர சங்கிதையில் சிவரகசிய காண்டத்தில் வரும் முதல் ஆறுகாண்டங்களின் தமிழ் மொழிபெயர்ப்பே கந்த புராணம்.
உற்பத்தி காண்டம், அசுர காண்டம், மகேந்திர காண்டம், யுத்த காண்டம், தேவ காண்டம், தட்ச காண்டம் என்று ஆறு காண்டங்களை உடையது. இது முருகப்பெருமானின் வரலாற்றை முறையாகவும் முழுமையாகவும் கூறுகிறது. இது 91 படலங்களையும், 10345 பாடல்களையும் உடைய இது முருகப்பெருமானின் வரலாற்றை முறையாகவும் முழுமையாகவும் கூறுகிறது.
                 காஞ்சிபுரத்தில் இருக்கும் குமரக் கோட்டத்தின் அர்ச்சகர் காளத்தியப்ப சிவாசாரியார். அவருடைய குமாரர் தான் கச்சியப்ப சிவாசாரியார். குமரக் கோட்டத்து முருகக்கடவுளுக்கு நாள்தோறும் பூஜை செய்த மெய்யன்பில் வடமொழிப் புராணத்தின் சிறப்பினைத் தமிழ்கூறு நல்லுலகம் அறியும் வண்ணம் இந்தப் புராணத்தை இயற்றினார். அதன் பின் குமரக் கோட்டத்திலேயே அரசர், பிரபுக்கள், கல்வி கேள்விகளில் சிறந்த வல்லுநர்கள் முன்னிலையில் தினம் ஒரு பகுதியாகப் பாடிப் பொருள் கூறி விளக்கி ஓராண்டுக் காலமாகத் தன் நூலினை அரங்கேற்றினார்.
                அரங்கேற்றம் முற்றுப் பெற்ற நாளில் கச்சியப்ப சிவாசாரியாரைத் தங்கச் சிவிகையில் ஏற்றி தொண்டை மண்டலத்தின் இருபத்துநான்கு வேளாளர்களும் காஞ்சியின் மற்றையோரும் சிவிகை தாங்கியும் சாமரம் வீசியும் குடை கொடி முதலானவைகளை எடுத்துப் பிடித்தும் வீதிவலம் வந்து நூலையும் ஆசிரியரையும் சிறப்புச் செய்தனர் என்று படிக்காசுப் புலவரின் பாடல் ஒன்று தெரிவிக்கிறது.
                 மாணிக்கவாசகர், கம்பர், முதலானவர்களோடு ஒப்பிட்டு கி. பி. 7 முதல் 17 வரை பல்வேறு காலங்களைக் கந்தபுராணத்துக்குச் சார்த்துகின்றனர்.
இந்நூல் சொற்பொருட் சுவையும் பக்திச் சுவையும் மிக்கதாக இருப்பதால் தமிழ்ப்புலவர்களாலும் முருகன் அடியார்களாலும் மிகவும் சிறப்பாகப் போற்றப்படுகிறது.இதனாலேயே "கந்த புராணத்தில் இல்லாதது வேறு எந்த புராணத்திலும் இல்லை" என சிறப்பிக்கப்படுகின்றது

கந்த புராணமும் கம்பராமாயணமும்:
                       கந்த புராணமும் கம்ப ராமாயணமும் ஒரேமாதிரியான காப்பிய அமைப்பினைப் பெற்றவை. பலவிதங்களில் இரண்டுக்கும் ஒப்புமை கூறி விளக்கிடுவர் தமிழ்ச்சான்றோர்.
         • இரண்டின் காலமும் பனிரெண்டாம் நூற்றாண்டு.
         • இரண்டிலும் காண்டங்கள் ஆறு.
         • ஒன்றில் முருகன் தலைவன்; மற்றதில் இராமன்.
         • இதில் வீரபாகு துணைவன்; மற்றதில் இலக்குவன்.
         • இதில் சூரபத்மன் பகைவன்; மற்றதில் இராவணன்.
         • இதிலே பூதகணங்கள் படைகள்; மற்றதில் குரங்கினமே படைகள்.
         • இரண்டிலும் பகைவனுக்கு மைந்தர்கள்.
         • ஒன்றில் சிறையிருந்தது சயந்தன், மற்றதில் சீதை.
         • இதிலே போருக்குக் காரணம் அசமுகி; மற்றதில் சூர்ப்பனகை
இதுபோல் நிறைய ஒப்பீடுகளுடன் பல ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளன.

11.பவிசிய புராணம்(சுமார் 15,500 ஸ்லோகங்கள்)

                      பவிசிய புராணம் என்பது மகாபுராணங்களில் ஒன்று. பவிஷ்யம் என்றால் வருங்காலம் என்று பொருளாகும். இதில் எதிர்காலத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளை ஞானதிருஷ்டியாலோ (அ) வேறு வகையிலோ அறிந்து கூறப்பட்டிருக்கிறது எனக் கருதப்படும் புராணம். வேத வியாசருக்கு ஆறு சீடர்கள் இருந்தனர். அவர்கள் சுமந்து, ஜைமினி, பைலா, வைசம்பாயனர், சுகதேவர், லோமஹர்ஷனர் ஆவர். இவர்களில் சுமந்து பிஷதனிகர்க்குக் கூறிய வரலாறே பவிஷ்ய புராணம்.

12.பிரம்ம வைவர்த்த புராணம்(சுமார் 18000 ஸ்லோகங்கள்):
     
               பிரம்ம வைவர்த்த புராணம்  என்பது மகா புராணங்களில் ஒன்றாகும். இப்புராணம் பிரம்ம காண்டம், பிரகிருதி காண்டம், கணேச காண்டம், ஸ்ரீகிருஷ்ண காண்டம் என்று நான்கு காண்டங்களைக் கொண்டதாகும்.
                 வைவர்த்தம் என்ற சமஸ்கிருத சொல்லிற்கு பரிணாம வளர்ச்சி என்று பொருள். எனவே பிரம்மனின் பரிணாம வளர்ச்சியை விவரிக்கின்ற புராணமான இது பிரம்ம வைவர்த்த புராணம் என்று அழைக்கப்படுகிறது.
               இக் காண்டத்தில் விநாயகரின் வரலாறும், பெருமைகளும் கூறப்படுகின்றன. பார்வதி தேவி கிருஷ்ண விருதம் இருந்து கிருஷ்ணனையே குழந்தையாக பெற்றார். அக் குழந்தை பிறந்த நாளில் கைலாசத்தில் பெரும் விழா நடந்தது. அதற்கு முனிவர்கள், தேவர்கள், யட்சகர்கள் என அனைவரும் வந்தார்கள். அவர்களில் சூரியனின் குமாரனான சனியும் வந்தார். ஆனால் குழந்தையை காணாமல் இருந்தார். அதைக் கண்ட பார்வதி தேவி சனிபகவானை குழந்தையை காணும் படி கூறினார்.
              சனியின் பார்வையால் குழந்தையின் தலை மறைந்தது. அதன் பிறகு கிருஷ்ணன் கருடனாக மாறி பூமியை வலம் வந்தார். அப்போது ஓர் ஆற்றங்கரையில் ஐராவதம் உறங்குவதை கண்டு அதன் தலையை சக்ராயுதத்தினால் கொய்தார். அதன் தலையை கைலாயத்தில் இருந்த தலையில்லா குழந்தையுடன் இணைத்தார்.
             கஜானனன் , லம்போதரன் , ஏகதந்தன், விக்கினஹரன் என விநாயகரின் பல பெயர்களுக்கான காரணங்களை இப்புராணம் விளக்குகிறது.
             கல்விக்கதிபதி சரசுவதியைக் காமதேனு எனக் கொண்டால் சுருதிகள் (வேதக்ரந்தங்கள்) கன்றுகள் ஆகும். பிரம வைவர்த்த புராணம் பால் ஆகும். வேதவியாசர் அந்தப் பசுவிலிருந்து அதைக் கறந்து எடுத்தார்.
             பிரளயத்தினால் பாதிக்கப்பட்ட அறியாமை மிக்க மக்கள் இடைவிடாது பாயும் இந்த இனிய பாலைக் குடிக்கச் செய்தார். இந்த பிரம வைவர்த்தக புராணத்தைச் சூதமுனிவர் முனிவர்களுக்கு நைமிசாரண்யத்தில் கூறலானார். முதல் காண்டத்தில் கடவுளர்கள், மனிதர்கள் பற்றியும்; இரண்டாம் காண்டத்தில் கடவுளர்கள், தேவிகள், அவர்களை வழிபடும் முறை மற்றும் பலவித சொர்க்கங்கள், நரகங்கள், நோய்கள், நிவாரண வழிகள் என்பவையும்; மூன்றாவது காண்டத்தில் கிருஷ்ணாவதாரம், கிருஷ்ண லீலைகள் பற்றியும் விவரிக்கப்படுகின்றன.

மீதமுள்ள புராணங்களை பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.


நன்றி!!!
ம.ஞானகுரு