Tuesday, August 21, 2012

இலங்கையில் தமிழர் பகுதிகளுக்கு கூடுதல் அதிகாரங்கள்: ராஜபக்சே



           அதிகாரப்பகிர்வு தொடர்பான, இலங்கை அரசியல் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த அதிபர் ராஜபக்சே தீர்மானித்துள்ளார். இதைச் செய்தால்தான் பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என்று இந்தியா சார்பில் நெருக்குதல் தரப்பட்டதால் இந்த முடிவுக்கு ராஜபக்சே வந்துள்ளார்.

          ஜே.ஆர்.ஜெயவர்த்தனே இலங்கை அதிபராக இருந்தபோது அரசியல் சட்டத்தில் 13வது திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டன. மேலும் மாகாண கவுன்சில்களும் உருவாக்கப்பட்டன.

        மேலும் தற்போது இலங்கை மத்திய அரசின் வசம் உள்ள காவல்துறை பொறுப்பு மாகாண கவுன்சிலர்களின் சுயேச்சை அமைப்பாக மாற்றப்படும்.

         இந்த சட்டத் திருத்தம் பின்னர் வந்த அரசுகளால் முறையாகக் கடைப்பிடிக்கப்படவில்லை. இந்த நிலையில் தற்போது இந்த சட்டத் திருத்தத்தை முழுமையாகக் கடைப்பிடிக்க ராஜபக்சே திட்டமிட்டுள்ளார்.

        அதன்படி தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கால அரசுகள் உருவாக்கப்படும். காவல்துறை பொறுப்பு இந்த மாகாணங்களின் சுதந்திர துறையாக மாற்றப்படும்.

         ராஜபக்சேவின் இந்த முடிவுக்கு இந்தியாவின் நெருக்குதலே காரணம் எனக் கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 4ம் தேதி இலங்கையின் 60வது சுதந்திர தின விழா கொண்டாடப்படவுள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளுமாறு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இலங்கை அரசு அழைப்பு விடுத்துள்ளது.

         இருப்பினும் 13வது சட்டத் திருத்தத்தை முழுமையாக அமல்படுத்தினால் மட்டுமே பிரதமர், இலங்கைக்கு வர முடியும் என இந்திய அரசுத் தரப்பில் இலங்கை அரசுக்கு நெருக்குதல் தரப்பட்டதாக தெரிகிறது.

மேலும் தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் அதிகாரப் பகிர்வுத் திட்டத்தையும் இலங்கை அரசு அறிவிக்க வேண்டும் எனவும் இந்தியா வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதையடுத்தே ராஜபக்சே அதிகாரப் பகிர்வுக்கு வழி வகுக்கும் 13வது சட்டத் திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி விரைவில் ராஜபக்சே இதுதொடர்பான அறிவிப்பை வெளியிடுவார்.

புதிதாக அறிவிக்கப்படவுள்ள வடக்கு மாகாண கவுன்சிலின் தலைவராக முன்னாள் எம்.பி. ஆனந்தசங்கரி தலைவராக நியமிக்கப்படவுள்ளார். அமைச்சரும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா இந்த மாகாண நிர்வாகத்தில் முக்கியப் பங்கு வகிப்பார்.

கிழக்குக் கவுன்சிலில் யாரைத் தலைவராக நியமிப்பது என்பது குறித்து இதுவரை அரசு முடிவெடுக்கவில்லை. இருப்பினும் இந்த மாகாணக் கவுன்சிலுக்கும், அரசு ஆதரவு தமிழர் ஒருவரே நியமிக்கப்படக் கூடும் என்று தெரிகிறது. அதேசமயம், முஸ்லீம் மற்றும் சிங்கள சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் 2ம் மட்ட நிர்வாக பொறுப்புகளில் நியமிக்கப்படுவர்.

கிழக்கு மாகாணக் கவன்சில் தலைவர் பொறுப்பில் பிள்ளையன் என்பவர் நியமிக்கப்படலாம் என்ற பேச்சு உள்ளது.

source : oneindia 

இலங்கையில் தமிழர்கள் சம உரிமை பெறவேண்டும் என தமிழக  அரசு எடுத்த சிறு முயற்சிக்கு கிடைத்த சிறு பலன் இது மேலும் சட்டசபை தேர்தலில் நாம் புகட்டிய பாடத்தால் மத்திய அரசு நமக்கு இப்பொழுது பணிந்துள்ளது என்றே கூறலாம். மேலும் தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் அனைவரும் கட்சி பாகுபாடின்றி ஒன்று திரண்டு நம் போராட்டத்தை வெளிபடுத்தினால் தனி ஈழம் என்பது எட்டாக்கனி ஒன்றும் அல்ல...

கருத்துக்களை கமெண்ட் இல் சொல்லுங்கள். மேலும் இலங்கை தமிழ் நண்பர்கள் தங்கள் கருத்துக்களை தவறாமல் கமெண்ட் பாக்ஸ் இல் இட்டு செல்லுங்கள்...

1 comments:

Unknown said...

மன்மொகன்சிங்கிற்கு கொடுத்த எந்த உறுதிமொழியையும் மகிந்தா நிறைவேற்றவில்லை;13ம் திருத்தம் கொண்டரப்பட்டால் தமிழர்கள் நிலை இன்னும் மோசமாகும் நண்பா...பிள்ளையான்,டக்லஸ்,ஆனந்தசங்கரி போன்றவர்கள் தொடர்ந்து சிங்கள ஆதரவாளர்கள் இங்கு இடம்பெறும் கொலை,கொள்ளை,ஆள்கடத்தல் போன்றவற்றை சிங்கள அரசின் சொல்கேட்டு நடத்தி முடிப்பவர்களே அவர்கள் தான் அதிகாரம் கிடைத்தால் கேட்கவா வேண்டும்!
மேலதிக விபரங்களிற்கு
(http://artskarua.blogspot.com/2012/05/13.html)