Tuesday, January 10, 2012

விண்வெளியில் காந்த குடை விரிக்க சூப்பர் திட்டம்!

செயலிழந்த செயற்கை கோள்கள், விண்கலங்களில் இருந்து வெளியேறிய பொருட்கள், சிறிய நட், போல்ட் என்று 22 ஆயிரத்துக்கும் அதிகமான பொருட்களில் விண்வெளியில் மிதக்கின்றன. இவற்றால் செயற்கை கோள்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்று எச்சரிக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

விண்வெளியில் சுற்றும் செயற்கை கோள்கள், தேவையற்ற பொருட்கள் தொடர்பாக அமெரிக்காவின் தேசிய ஆய்வு கவுன்சில் ஒரு ஆராய்ச்சி மேற்கொண்டது. இதில் தெரியவந்த தகவல்களை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: உலகின் பல நாடுகளும் பல ஆண்டுகளாக விண்ணில் செயற்கை கோள்களை செலுத்தி வருகின்றன. இவை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு செயலிழக்கின்றன. ஆனாலும், தொடர்ந்து விண்வெளியில் மிதந்து வருகின்றன. இதுதவிர, விண்வெளியில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும்போதும் குப்பைகளாக பல பொருட்கள் வெளியேற்றப்படுகின்றன.

இது மட்டுமின்றி விண்கலங்கள் மற்றும் செயற்கை கோள்களில் இருந்து எதிர்பாராதவிதமாக விலகும் நட், போல்ட், டூல்ஸ் போன்றவையும் விண்வெளியில் சுற்றி வருகின்றன. சிறிதும் பெரிதுமாக இவ்வாறு 22 ஆயிரத்துக்கும் அதிகமான பொருட்கள் பூமிக்கு அருகில் விண்வெளியில் சுற்றி வருகின்றன. செயலிழந்த செயற்கை கோள் ஒன்றை தகர்த்து அழிக்கும் முயற்சி 2007-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. ஏவுகணை போன்ற ஆயுதத்தால் மோதி அழிக்கப்பட்டது.

அது 1.50 லட்சம் பீஸ்களாக உடைந்து விண்வெளியில் மிதந்தது. 2009-ல் இரு செயற்கை கோள்கள் எதிர்பாராவிதமாக மோதிக் கொண்டன. அதனாலும் குப்பை எண்ணிக்கை அதிகரித்தது. இந்த விண்வெளி குப்பைகள் மணிக்கு 28 ஆயிரம் கி.மீ. வேகத்தில் சுற்றி வருகின்றன. தற்போது செயல்பாட்டில் இருக்கும் செயற்கை கோள்கள், விண்கலங்கள் ஆகியவற்றின் மீது இவை மோதினால் பெரிய அசம்பாவிதங்கள் நடக்கும் ஆபத்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விண்வெளி குப்பைகளை பத்திரமாக அகற்றுவது தொடர்பாகவும் ஆய்வுகள் நடந்து வருகின்றன. தூண்டில், வலை போன்ற கருவிகளை வைத்து அவற்றை அகற்றலாம் என்று விஞ்ஞானிகள் பரிந்துரை செய்துள்ளனர். காந்த சக்தி கொண்ட பிரமாண்ட குடை மூலமாக அப்பொருட்களை கவர்ந்திழுக்கலாம் என்ற யோசனையும் கூறப்பட்டுள்ளது

0 comments: